1. Home
  2. தமிழ்நாடு

வைகோ மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்..? துரை வைகோ வெளியிட்ட தகவல்!

1

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோவுக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. வைகோ விரைவில் நலம்பெற்று தனது அரசியல் பணிகளை தொடர வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோவின் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார்.

இந்நிலையில்,வைகோ மகனும் மதிமுக தலைமை கழகச் செயலாளருமான துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில், “வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை அழைத்து தலைவர் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை வைகோவை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் தன்னை செல்போனில் தொடர்புகொண்டு பதற்றத்துடன் வைகோ உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள் என்று விவரித்த துரை வைகோ, “அரசியல் எல்லைகளை கடந்து வைகோ மீது உள்ள உயர்ந்த மதிப்பால், அன்பால் தலைவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் செல்போன் வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நாளை அதாவது இன்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள் என்றும், சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

 “எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். மிகவும் பிடித்த டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார். ஆகவே, அவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள்.” என்றும் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like