1. Home
  2. தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது எப்படி? - டிடிவி ஓபன் டாக்..! தினகரன்

W

சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன, வரவிருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது விரைவில் தெரியவரும் என்றும், டிசம்பரில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்றும் அவர் கூறினார்.

"பாஜகவின் பாதுகாப்பில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார். நாங்கள்தான் அவரை முதல்வர் ஆக்கினோம்" என்று தினகரன் கூறினார்.

கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்க மறுத்து பல எம்.எல்.ஏக்கள் தப்பி ஓட முயன்றதாகவும், அவர்களை பாதுகாத்து தான் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினோம் என்றும் தினகரன் கூறினார். 2011ஆம் ஆண்டு தன்னை கட்சியில் இருந்து அம்மா நீக்கியது உலகுக்கே தெரியும் என்றும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த அந்த 10 ஆண்டுகளில் தான் யாருடனும் தொடர்பில் இல்லை என்றும் அவர் கூறினார். தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் எந்த வித பகையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியது திட்டமிட்டு அல்ல என்று கூறிய தினகரன், பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்றார். "எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் அதிமுக இனி வெற்றியே பெறாது. அமமுகவை பொறுத்தவரை, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்றால் அந்த கூட்டணியில் இடம்பெறாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லாது. அப்படி சென்றால் அது தற்கொலைக்கு சமம்" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

அண்ணாமலை தனக்கு நல்ல நண்பர் என்றும், உண்மையை பேசக்கூடியவர் என்றும் தினகரன் குறிப்பிட்டார். "அவரது எண்ணமும், என்னுடைய எண்ணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அண்ணாமலையும் நானும் 9 ஆம் தேதி டெல்லிக்கு செல்வதாக இருந்தது" என்றும் அவர் கூறினார்.

"நாளுக்கு ஒரு பேச்சு பேசுபவன் நான் அல்ல. என் பேச்சு எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். எடப்பாடி பழனிசாமி மாறிமாறி பேசக்கூடியவர்" என்று தினகரன் விமர்சித்தார். பழனிசாமியின் முகம் வாடியுள்ளது என்றும், காரில் வரும்போது ஏ.சி. போடவில்லையா? எதற்காக அவர் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டிருக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பினார். "அவர் வந்த கார் யாருடையது என்பது கூட எனக்கு தெரியும். எனக்கு டெல்லியில் ஆள்கள் இருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது விரைவில் தெரியவரும் என்றும், டிசம்பரில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்றும் தினகரன் தெரிவித்தார். அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

.

Trending News

Latest News

You May Like