1. Home
  2. தமிழ்நாடு

பிரதமராக பதவியேற்றார் மோடி : ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 72 பேர் அடங்கிய புதிய அமைச்சரவையும் பதவியேற்பு..!

1

இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது. அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அத்துடன் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் என்.டி.ஏ. கூட்டணி தொடங்கியது.

பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் என்.டி.ஏ. கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன. இதைத்தொடர்ந்து பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்தது. இதில் கூட்டணியின் பாராளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர். மேலும் பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்து போட்ட கடிதங்களையும், ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று திரெளபதி முர்முவை சந்தித்தார். அத்துடன் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் கோரினார். இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 72 பேர் அடங்கிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பல்வேறு அண்டை நாடுகளை சேர்ந்த 7 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தினர். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

Trending News

Latest News

You May Like