ஆபரேசன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் பெருமிதம் !

பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைக்காத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்திருந்திருந்தார். இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பயங்கரவாதத்துக்கு எதிராக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 1.45 மணி அளவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் நமது எல்லைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தனர். இதில், சுமார் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. கடந்த 2019-இல் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு பாரதத்தின் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும். பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.