பொங்கல் முடியும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை..!

“மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்” என, ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் பரவி வரும் ஒமைக்ரான் நோய் தொற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் நோய் தடுப்புக்காக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனாலும், நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
இப்போது ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகையைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் பொதுமக்களின் போக்குவரத்தாலும், கூட்ட நெரிசலாலும் நோய் தொற்று அதிகமாக பரவலாம்.
எனவே தமிழக அரசு, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் பண்டிகை முடியும் வரை விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.