டெல்டா வைரஸ் பரவல் - பள்ளிகளுக்கு விடுமுறை!
சமீபத்தில், சிங்கப்பூரில் இருந்து தென் சீனப் பகுதியின் புஜியான் மாகாணத்தில் உள்ள புட்டியான் நகருக்கு திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம், 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலம் 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
நேற்று மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இப்போது டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இலக்கு என்று சீனா அஞ்சுகிறது.
எனவே, புட்டியான் நகரின் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம், சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீண்டும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.