வயிற்றில் ஓட்டை.. சிறுமியின் பரிதாப நிலைக்கு காரணம் என்ன?
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், இவர்கள் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அங்கு திரவ நைட்ரஜன் கலந்த புகை பீடாவை சிறுமி சாப்பிட்டுள்ளார். ஆனால், அங்கேயே சிறுமிக்கு எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதனை அடுத்து, சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமையை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் ஓட்டை விழுந்துள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பெற்றோர் சம்மதத்திற்கு இணங்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திரவ நைட்ரஜன் கலந்த புகை பீடாவை சாப்பிட்டதாலேயே சிறுமியின் வயிற்றில் ஓட்டை விழுந்ததாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், திரவ நைட்ரஜன் கலந்த புகை பீடாவை சாப்பிட்டதால் அது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுமார் நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் அளவு சிறுமியின் வயிற்றில் ஓட்டை விழுந்ததாகவும் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். எனவே, அதி தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம், இந்த அறுவை சிகிச்சையானது சிறுமியின் வயிற்றுப் பகுதியில் சிறிய ரக கேமராவை உட்செலுத்தி குடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்கள் சிறுமி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அடுத்த ஆறு நாட்களுக்குப் பிறகு சிறுமி பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்னரே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.