ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் உடையார் அதிரடி கைது..!

ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் உடையார் திருநெல்வேலி பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ்செல்வத்திடம் பேசியதாக ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர் தமிழ்செல்வன் உடன், உடையார் ஆடியோவில்,‛‛ தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துவிட்டது. வேதனையாக இருக்கிறது. திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை மக்களுக்கு கொடுக்காமல் கட்சியினர் வீட்டுக்குள் வைத்து கொண்டனர்.
நயினார் நாகேந்திரன் தனது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மூலமாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் பணத்தை விநியோகம் செய்தார். அதனால் உண்மையான பா. ஜ.,வினருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சதி செய்துள்ளனர். இதனால் தான் தமிழகத்தை பா.ஜ.,வை வெற்றி பெற செய்யாமல் செய்துள்ளனர். தமிழகத்தில் இதற்கு முன்னால் இருந்த எந்த தலைவர்களும் எழுச்சிகரமான பணியை செய்யவில்லை. கட்சியினர் வேலை செய்தால், தமிழகத்தில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்து இருப்பார்கள்.
கலவரம் செய்தால் தான் பா.ஜ.,வால் தமிழகத்தில் காலூன்ற முடியும். இவ்வாறு ஹிந்து மக்கள் கட்சி திருநெல்வேலி உடையார் மற்றும் பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர் தமிழ்செல்வன் உரையாடும் ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய உடையார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.