மகளிர் வாழ்வாதார நலத்திட்டங்களை தெரிந்து கொள்ள உதவி எண் அறிவிப்பு..!
தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளிகள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறிப்பிடத்தக்கவை.
அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள், நகர்ப்புற இளைஞர்களுக்காக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள், இளைஞர் திறன் விழாக்கள் போன்றவையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள், நலத்திட்டங்கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டுதல்களை பெறவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொது அலுவலக வேலை நாட்களில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் 155330 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.