ஹெலிகாப்டர் விபத்து.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில், நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர் பலியாகினர்.

கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலியான வீரர்களின் உடல்கள் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளது.
இந்த விபத்து குறித்து பல சர்ச்சையான கருத்துக்களை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் ஏற்கெனவே தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வரப்படும். அதுவரை யூகமான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி, பொய் தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தவறாக கருத்து பரப்பினால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.