கடலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை : உதவி எண் அறிவிப்பு..!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை மழை பெய்து வருகிறது.
கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பரவலாக பெய்து வந்தது.
பல்வேறு இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்து வரும் நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன.
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இது போன்று மழை பெய்தால் பிற்பகலுக்குப் பிறகு தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் அவலநிலை எழுந்துள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக சிதம்பரத்தில் காலை 6 மணி வரை 10 செ.மீ மழையும் காட்டுமன்னார்கோவிலில் 9.8 செ.மீ மழையும் பெய்துள்ளது. மழையை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை தொடர்பான எந்த ஒரு புகாரையும் 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.