1. Home
  2. தமிழ்நாடு

இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

1

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 280 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 380 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது.

இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) காலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். புயல் நகர்ந்து வரும்போது காலையில், சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவிலும், மாலையில் 25 கிமீ தொலைவிலும் நிலவக்கூடும்.

இதன் காரணமாக இன்று (நவ.30) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்திலும், இடையிடையே 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்திலும், இடையிடையே 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

இன்று (நவ.30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவ.30) காலை வரை அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும், டிச.1-ம் தேதி அதிகபட்சமாக 65 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Trending News

Latest News

You May Like