கட்டண கழிவறையாக மாற்றியதன் மூலம் 10 கோடி வருமானம் தரக்கூடிய வியாபாரமாக அரசாங்கம் மாற்றியதாக குற்றச்சாட்டு..!

அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழிவறைக்கு 5 ரூபாய் வாங்கினால் என்ன தவறு? என்று கேட்பவர்களுக்கு இந்த கணக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும். மொத்தமுள்ள 8628 தொலை தூர அரசு பேருந்துகளில் 1078 பேருந்துகளில் (1 கழகம்) மட்டும் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இலவசமாக வழங்கப்பட்டு வந்த கழிவறை வசதியை மாற்றி கழிவறை கட்டணமாக 5 ரூபாய் வாங்குவதன் மூலம் வருடத்திற்கு 10 கோடி வரை சம்பாதிக்க கூடிய ஒரு புதிய வியாபாரத்தை அரசாங்கம் உருவாக்கி கொடுத்துள்ளது. இதில் பயனடைய போவது தனியார் உணவகங்களும் அவர்களுக்கு இந்த வருமானத்தை ஏற்படுத்தி தரும் அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு பாலமாக செயல்படும் இடைத்தரகர்களும் தான்.
சரி 5 ரூபாய் வாங்கினாலும் பரவாயில்லை அந்த கழிவறை சுத்தமாக இருந்தால் போதும் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி ஒரு நினைப்பு இருந்தால் 10 ரூபாய் வரை கட்டணம் வாங்கும் அரசு பேருந்து நிறுத்தங்களில் செயல்படும் கட்டண கழிவறை உள்ளே ஒரு முறை சென்று பாருங்கள். உங்களுக்கு உண்மை விளங்கிவிடும்.
நெடுஞ்சாலைகளில் செயல்படும் மற்ற தனியார் உணவகங்கள் தங்கள் உணவகத்திற்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காக இலவச கழிவறையை சுகாதாரமாக வழங்கி வருகிறார்கள். உணவின் தரத்தையும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு பேருந்துக்கு வெறும் 50 ரூபாய் அரசுக்கு கட்டணமாக கொடுத்துவிட்டு 40 பயணிகளை தங்கள் உணவகத்துக்கு வரவழைக்கும் டெண்டர் எடுத்த உணவகங்கள் உணவையும் தரமாக கொடுப்பதில்லை. சரியான விலையும் இல்லை. தற்பொழுது கழிவறைக்கு காசும் கேட்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்று அமைச்சரும் முதல்வரும் மக்களுக்கு விளக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.