நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஹைகோர்ட் அதிரடி மறுப்பு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தமக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யச் சீமான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகியெனப் பேசி, வன்முறையைத் தூண்டியதாகக் கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பிடி வாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க முடியாது எனவும் கூறி, சீமானின் மனுவுக்குப் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 6ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.