வாகன ஓட்டிகள் ஹேப்பியோ ஹேப்பி! போக்குவரத்து சிக்னல்களில் 'பச்சை நிற பந்தல்'..!

தமிழகத்தில் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரையில் வெயில் அதிக அளவு உணரப்படுகிறது. ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிலர் வேலைக்காக வாகனங்களில் வெயிலில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இப்படிப்பட்ட நேரங்களில் பொதுமக்கள் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சென்னையில் 14 இடங்களை தேர்வு செய்து போக்குவரத்து சிக்னல்களில் பச்சை நிற பந்தல் அமைத்துள்ளது.
வெயிலில் பல கிலோமீட்டர்கள் பயணித்து களைத்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த பச்சை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த பந்தலானது தற்பொழுது வெயின் தாக்கம் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே போடப்பட்டுள்ளது.
அதன்படி பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் 15 அடி நீளம் - 10 அடி அகலம், ஐசிஎஃப் சிக்னலில் 20 அடி நீளம் - 11 அடி அகலம், நியூ ஆவடி சாலையில் 15 அடி நீளம் - 10 அடி அகலம், அண்ணா நகர் ரவுண்டானாவில் 20 அடி நீளம் - 12 அடி அகலம், சிந்தாமணி சிக்னலில் 15 அடி நீளம் - 10 அடி அகலம், அண்ணாசாலை பின்னி ரோட்டில் 30 அடி நீளம் - 12 அடி அகலத்தில் பசுமை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தியாகராய நகர் பசுல்லா சாலையில் 25 அடி நீளம் - 8 அடி அகலம், வடக்கு உஸ்மான் சாலையில் 25 அடி நீளம் - 8 அடி அகலம், திருவான்மியூர் அருகே இசிஆர் மேற்கு அவென்யூ சாலையில் 30 அடி நீளம் - 12 அடி அகலம், டைட்டல் பார்க் மேற்கு அவன்யூ சாலையில் 30 அடி நீளம் - 10 அடி அகலத்தில் பசுமை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எல்.பி. சாலையில் 26 அடி நீளம் - 12 அடி அகலம், கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை அடையாறு சிக்னலில் 10 அடி நீளம் - 12 அடி அகலத்தில் பசுமை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.