எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்திவைப்பு..!
பா.ஜ., தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈ.வெ.ரா சிலையை உடைப்பேன் என்று 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக கருத்து கூறியதாகவும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் தி.மு.க., காங்கிரஸ் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரில் ஈரோடு நகர் போலீஸ் ஸ்டேஷன், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது. ஈவெரா சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் எச். ராஜா வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இந்த இரண்டு வழக்குகளிலும் நீதிபதி ஜெயவேல் இன்று (டிச.,2) தீர்ப்பு வழங்கினார். அதில், 'எச்.ராஜா மீதான புகார் போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டது. எனவே எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என கருதப்படுகிறார்,' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
மேலும், எச்.ராஜாவுக்கு, இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும், இரு வழக்கிலும் சேர்த்து ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்ய எச்.ராஜாவுக்கு ஓராண்டு அவகாசம் வழங்குவதற்காக தண்டனை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.