இனி பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர்வு எண் மற்றும் வலைதளம் தொடக்கம்..!

ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளை களையும் பொருட்டு ‘ஊராட்சி மணி’ என்கிற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள், தங்கள் குறைகளைத் தெரிவிக்கஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் இலவச குறைதீர்வு அழைப்பு எண் ‘155340’ மற்றும் 'Ooratchimani.in' என்ற வலைதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை மூலம் பொதுமக்கள் எளிதில் அணுக முடியும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் புகார் மீது தீர்வு காணப்படும். மேலும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள்ஆகியோருக்கு ஏற்படும் குறைகள், சந்தேகங்களை ‘ஊராட்சி மணி’ மூலம் அணுகி பதில் பெறும்வகையில் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ப.செந்தில்குமார், இயக்குநர் பா.பொன்னையா, கூடுதல் இயக்குநர் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ‘ஊராட்சி மணி’ அழைப்புமையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்டங்களில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.‘ஊராட்சி மணி’ என்ற பெயர்மனுநீதி சோழனின் புராணக்கதையை முன்னோடியாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.