பிறந்த நாளிலேயே நேர்ந்த சோகம் - பட்டதாரி இளம்பெண் தற்கொலை!
செங்கல்பட்டு அருகே திருமணம் ஆகாத விரக்தியில், தனது பிறந்த நாளிலேயே இளம் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கும், மகனுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், இளைய மகள் தீபிகா (28) எம்.பி.ஏ (MBA) பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தீபிகாவிற்கு வரன் பார்க்கும் முயற்சியில் அவரது பெற்றோர் கடந்த ஏழு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், பொருத்தமான வரன் அமையாததால் தீபிகா கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று தீபிகாவின் பிறந்த நாள் என்பதால், அதிகாலையிலேயே வீடே மகிழ்ச்சியில் இருந்தது. மகளுடன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யப் பெற்றோர் பூஜை சாமான்களை வாங்கி வைத்துக்கொண்டு தயாராக இருந்துள்ளனர். அப்போது குளித்துவிட்டு வருவதாகக் கூறி கழிவறைக்குச் சென்ற தீபிகா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டியும் பதிலில்லை. இறுதியில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஷவரில் (Shower) தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெருமாள் கோவில் போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய பிறந்த நாளிலேயே, ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆவேசத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.