GOVT SCHEME : தமிழ்நாடு முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை திட்டம்!

கல்லூரியில் படித்தால் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்ற காரணத்தால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உயர்க் கல்வி படிப்பை தொடர முடியாமல் போய்விடுகிறது. இதை கருத்தில் கொண்டே மாநில அரசு 2011 ஆம் ஆண்டு முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை திட்டம் (First Generation Graduate Scholarship Scheme) என்ற உன்னத திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் இன்ஜினியரிங், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை, வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட முக்கிய படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நிதி சிக்கல் இல்லாமல், கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொருக்கும் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையானது அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் அனைத்து முதல் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
அடுத்து நேரடியாக டிப்ளமோ இரண்டாம் ஆண்டு சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.40,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், மருத்துவ துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.25 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், பெற்றோர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பாதியில் நிறுத்தி இருந்தாலும், உடன் பிறந்தவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறாமல் இருந்தாலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்
முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகையை பெற மாணவர்கள் முதலில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற வேண்டும். அதேபோல், இந்த உதவித்தொகையானது கல்லூரியில் கலந்தாய்வு மூலம் சேரும் மாணவ, மாணவிகளிக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த சான்றிதழை பெற விண்ணப்பதாரர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்பத்தில் டிகிரி முடித்தவர்கள் யாரும் இருக்கக் கூடாது. அதாவது, குடும்பத்தில் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணன் இவர்களில் யாரும் டிகிரி முடித்து இருந்தால் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்த சான்றிதழை பெற குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு மற்றும் வயது வரம்பு இல்லை.
முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வைத்து இருக்க வேண்டியது அவசியம்.
- ஆதார் கார்டு
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- 10 & 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- ஸ்மார்ட் ரேஷன் கார்டு
- பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)
- வருமானச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (Self Declaration)
- பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)
- பெற்றோரின் சுய உறுதிமொழி படிவம் (Self Declaration)
முதல் பட்டதாரி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறை
இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற விண்ணப்பதாரர் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 - 30 நாட்களுக்குள் உங்களுடைய விண்ணப்பம் கிராம நிர்வாக ஆய்வாளருக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும். அவர்கள் இருவரும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்ததும், கள விசாரணை மேற்கொள்வார்கள்.
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பத்தினை ஏற்க மண்டல துணை வட்டாட்சியருக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகு, ஒரு வாரத்திற்குள் மண்டல துணை வட்டாட்சியர் சான்று வழங்க ஒப்புதல் அளிப்பார். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வரப்பெற்றவுடன் ஆன்லைனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
முதல் பட்டதாரி சான்றிதழுக்கு ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு, முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TN eSevai போர்ட்டலை பார்வையிடவும். இப்போது, Citizen Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருந்தார் User name, Password கொடுத்து Login செய்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் புதிய பயனராக இருக்கும்பட்சத்தில், New User? Sign Up here என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஒரு புதிய பேஜில் உங்களைப் பற்றி விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டிருக்கும். அதில், முழுப் பெயர், தாலுக்கா, மாவட்டம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை கொடுத்து, பாஸ்வோர்டு செட் செய்துக் கொள்ளவும். தொடர்ந்து Login பேஜில் பயனர் பெயர், பாஸ்வோர்டு மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு Login என்ற பொத்தானைக் கிளிக் செய்து உள்நுழையவும்.
இப்போது பேஜின் இடது பக்கத்தில் Services என்ற விருப்பத்தை கிளிக் செய்து, Revenue Department என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கு, ஒரு பட்டியல் தோன்றும் அதில் REV-104 First Graduate Certificate என்பதை தேர்ந்தெடுத்தவுடன், Tamil Nadu e-District என்ற வெப் போர்ட்டலுக்கு Redirect ஆகும். அதில், அப்ளை செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கவனமாகப் படித்து, அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். படித்த பின் proceed கொடுத்து உள்ளே செல்லவும்.
அடுத்ததாக உங்களிடம் CAN நம்பர் இருந்தால் அதை உள்ளிடவும், ஒருவேளை இல்லையென்றால், CAN Registration க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு Register Can என்பதை கிளிக் செய்தால், ஒரு CAN விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும். அதை பிழையில்லாமல் பூர்த்தி செய்து Register என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். இப்போது உங்களுக்கான CAN நம்பர் திரையில் காண்பிக்கப்படும்.
அதன்பிறகு, திட்டத்திற்கான விண்ணப்பத்தில், உங்களுடைய தொழில், வகுப்பு, படிப்பு, உங்கள் அம்மா, அப்பா, அவர்களுடைய சுயவிவரம், தாத்தா, பாட்டி, அவர்களுடைய சுயவிவரம், வேலை தொடர்பான மற்ற அனைத்து விவரங்களை பிழையில்லாமல் பூர்த்தி செய்து, அதன் பின் submit கொடுக்கவும். அடுத்தபடியாக, தேவையான ஆவணங்களை ஒவ்வொன்றாக அப்லோடு செய்து, Make Payment பொத்தானை கிளிக் செய்து பணம் செலுத்த வேண்டும்.
இப்போது Payment செய்வதற்கு நெட் பேங்கிங், டெபிட் கார்டு, யுபியை போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ரூ.60 பணத்தை செலுத்தவும். பிறகு, Print Receipt என்பதை கிளிக் செய்து ஒப்புகை சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்ப்பார்கள்.
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் நீங்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.