அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவர்..!

பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதுவும் முன் தேதியிட்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப் படி உயர்த்தப்பட்டது. அப்போதும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது.
டிசம்பர் 2022-இல் முடிவடைந்த காலத்துக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீமாக அதிகரிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது என்று அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மிக நீண்ட நாள்களாக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பரிசாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. ஒருவருக்கு, அடிப்படை ஊதியமான ரூ.18 ஆயிரம் மாத வருமானம் என்றால், தற்போது 42 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்டால் ரூ.7,560 கிடைக்கும். இது தற்போது 46 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதால் வருவாயுடன் அகவிலைப்படி ரூ.8,280 கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது. இதன் முன்பு கடந்த மார்ச் 24-ஆம் தேதி அகவிலைப்படி உயா்த்தப்பட்டு, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.