அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ரவி அதிரடி உத்தரவு..!
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிப்பதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருவதாக அறப்போர் இயக்கம் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தது. இதுதொடர்பான சில தகவல்களையும் அது வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த மோசடி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் எந்தெந்த கல்லூரிகளில் இந்த மோசடி நடந்திருக்கிறது; எத்தனை பேராசிரியர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜுக்கு ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு இதுதொடர்பாக விளக்கம் தர உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறும் தனது உத்தரவில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இதுதொடர்பாக முதல்கட்ட அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை அழைத்து விசாரணையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.png)