காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த மத்திய பிரதேச மாநில ஆளுநர் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 85. லால்ஜி தாண்டன் உயிரிழந்த செய்தியை அவரது மகன் அஷுதோஸ் தாண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் லால்ஜி தாண்டன் லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், லால்ஜி தாண்டன் கடந்த ஜூன் 11 அன்று மருத்துவமனையில் சுவாசப் பிரச்னைகள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டார்.
லால்ஜி தாண்டனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவர் வெண்டிலேட்டரில் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா நெகட்டிவ் இருந்தது எனத் தெரிவித்தனர்.
மக்கள் தங்கள் இறுதி மரியாதைகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அவரது மகன் அசுதோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லால்ஜி உ.பி. கல்யாண் சிங் அரசில் அமைச்சராக இருந்தவர். பிறகு பாஜக-பகுஜன் கூட்டணி மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் லால்ஜி பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை லக்னோவில் உள்ள குலாலா காட்-ல் நடைபெறுகிறது.
newstm.in