1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டம்..!

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டம்..!


இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அஞ்சல் துறையின் சார்பில் ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் (அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள்) இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றிடலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

மேலும், ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 250 (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும்) அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) வைப்புத் தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையைப் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக் கொள்ளலாம்.

முதிர்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்தத் திட்டத்தை தமிழக மக்களும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு இத்தகைய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் கூட 7.6 சதவீத வட்டி கொடுக்கும் நிலையான அரசு சேமிப்புத் திட்டம் என்றால் அது செல்வ மகள் சேமிப்புத் திட்டம்தான் என்றால் அது மிகையல்ல. 18 வயது பூர்த்தியாகும் வரை பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த கணக்கை பராமரிக்கலாம். அதன்பிறகு, யார் பெயரில் கணக்கு இருக்கிறதோ அவர் தான் கணக்கை பராமரிக்க முடியும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like