1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்..!!

மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்..!!


சுற்றுச்சூழல் மாசுபடாத புகையில்லா போகி பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் நச்சு கலந்த பொருட்களை மக்கள் எரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டுகளில் போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் வாரியத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிரசார ஊர்திகள் மூலம் சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. இது தவிர, பண்பலை அலைவரிசை (எப்.எம்.ரேடியோ) மூலமும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பபடுகிறது.

மேலும், போகி பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகி பண்டிகை நாளிலும், சென்னையின் 15 மண்டலங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

எனவே, பொது மக்கள் நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம். பழைய துணிகள் மற்றும் பயன்படத்தக்க பழைய பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவலாம். தேவையற்ற பொருட்களை எரிக்காமல் சுற்றுச்சூழல் மாசுபடாத புகையில்லா போகி பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like