அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் இடைநீக்கம்!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a4950cc50c5571300eea8a7f00425e38.png?width=836&height=470&resizemode=4)
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியிலிருந்து சென்ற அரசுப் பேருந்து ஒன்று அண்ணாமலை ஓட்டல் எனும் பேருந்துநிறுத்தத்தில், பெண் பயணிகள் கைகாட்டி நிறுத்த முயன்றனர். ஆனால், அந்தப் பேருந்து அங்கு நிற்காமல் சென்றது.அடிக்கடி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இப்படிச் செய்வதால், பெண் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். சிலர் இதைத் தட்டிக்கேட்டால், பேருந்து ஊழியர்கள் தகராறிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு புகார்தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஓட்டுநருக்கு தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
“ கடந்த 22.04.2024 அன்று விழுப்புரம் கோட்டம் விழுப்புரம் கிளை 2-ஐச் சார்ந்த டிஎன் 32 என்.2218, தடம் எண் - TIF விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் வரும்பொழுது சுமார் 8.00 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் வாயிலாக புகார் செய்தி வெளிவந்ததன் அடிப்படையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மண்டல பொது மேலாளர் அவர்களின் உத்தரவின்படி அப்பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஆறுமுகம், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.” என்று விழுப்புரம் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.