நீக்கப்பட்ட இந்திய ஆப்களை மீண்டும் இணைப்பு - கூகுள்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5317372fbf80adb07b7753ccf5a1edff.jpeg?width=836&height=470&resizemode=4)
ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் மூலம் தொழிலில் ஆதாயம் பெறும் இந்திய நிறுவனங்கள் 11 முதல் 26 சதவீத சேவைக் கட்டணம் செலுத்த கூகுள் நிறுவனம் வலியுறுத்தியது. சமீபத்தில் உயர்த்தப்பட்ட இந்த கட்டணத்தை சில இந்திய நிறுவனங்கள் செலுத்தவில்லை. இந்நிலையில் தங்களது கட்டண கொள்கைக்கு இணங்கவில்லை எனக்கூறி கடந்த வாரம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில முன்னணி இந்திய நிறுவனங்களின் ஆப்களை கூகுள் நீக்கியது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் மற்றும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசுடன் நேற்று பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தின.‘ இதனை தொடர்ந்து ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய நிறுவனங்களின் ஆப்களை மீண்டும் கொண்டுவருவதற்கு கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "சர்ச்சைக்குரிய கட்டண சிக்கலுக்கு தீர்வு காணப்படும். கூகுள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரும் மாதங்களில் நீண்ட கால தீர்வை எட்டும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிளே ஸ்டோரில் பயன்பாட்டு கட்டணம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு வணிக ஆப் (செயலி) நிறுவனங்களுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூகுள் 11 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதனை தொடர்புடைய நிறுவனங்கள் செலுத்த விரும்பவில்லை. இதனால், இந்தியாவை சேர்ந்த திருமண பயன்பாடு ஆப்-களான பாரத் மேட்ரிமோனி, ஷாதி, 99 ஏக்கர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஆப்-களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் அதிரடியாக நீக்கியது குறிப்பிடத்தக்கது.