திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நல்ல நேரம் அறிவிப்பு..!

சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமியாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மற்ற மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் முருகன் மற்றும் சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாட்களாக கருதப்படுகின்றன. ஆனால் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மட்டும் பூலோகத்தில் வசிக்கும் ஜீவராசிகளின் பாவ, புண்ணிய கணக்குகளை எமலோகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தருக்குரிய வழிபாட்டு நாளாக கருதி வழிபடுவது வழக்கம். இந்த நாளில் பாவங்களை போக்கி, முக்தியை அளிக்கும் சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் முக்தி தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.
சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தரை வழிபட்டால், அவர் நம்முடைய வழிபாட்டில் உள்ளம் மகிழ்ந்து, நம்முடைய பாவ கணக்குகளை குறைத்து, புண்ணிய கணக்குகளை அதிகரித்து எழுதுவார் என்பது மனிதர்களின் நம்பிக்கை. ஆனால் அவர் நேர்மையாக பாவ-புண்ணிய கணக்குகளை எழுதிக் கூடியவர் ஆவார். சித்ரா பவுர்ணமி நாள் என்பது சித்ரகுப்தரின் பிறந்த நாள் என்றும், திருமண நாள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவது மிகப் பெரிய புண்ணிய பலன்களை தரும் என்பது நம்பிக்கை. இது புதிய கணக்குகளை துவங்குவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி இந்த ஆண்டு மே 12ம் தேதி திங்கட்கிழமை வருகிறது.
பவுர்ணமி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அனைத்து நாட்களிலும், வருடத்தின் அனைத்து பவுர்ணமியிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பானது என்றாலும், சித்திரை, ஐப்பசி, கார்த்திகை உள்ளிட்ட சில மாதங்களில் வரும் பவுர்ணமியில் கிரிவலம் வருவது பாவங்களை போக்கி, புண்ணியங்களை தருவதுடன், அளவில்லாத நலன்களையும் நமக்கு பெற்றுத் தரும். இந்த ஆண்டு மே 11ம் தேதி இரவு 08.48 மணி துவங்கி, மே 12ம் தேதி இரவ 10.44 வரை பெளர்ணமி திதி உள்ளது.
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக சித்ரா பவுர்ணமி, முருகப் பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்த வருகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, விசாகம் நட்சத்திரம் முருகப் பெருமான் அவதரித்த நட்சத்திரம் ஆகும். விசாகம் நட்சத்திரத்திற்குரிய அதிபதி குரு பகவான். இவர் மங்களங்கள் அனைத்தையும் அருளக் கூடியவர். அது மட்டுமல்ல இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி திங்கட்கிழமையில் வருகிறது. திங்கட்கிழமையில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இந்திர பதவி கிடைக்கும். முற்பிறவி மட்டுமின்றி இந்த பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆரோக்கியம் சிறக்கும், நினைத்தது நடக்கும், வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.
சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரத்தை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கிரிவலம் செல்லும் பக்தர்கள், மே 11ம் தேதி இரவு 08.01 மணிக்கு துவங்கி, மே 12ம் தேதி இரவு 10.25 மணிக்குள் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலத்தை துவக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவனின் அருளும், சிவலோக பதவியும் கிடைக்கும் என்பார்கள்.