குட் நியூஸ்.. புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது;
“தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும்.
அரபிக்கடலின் தென்கிழக்குப் பகுதி குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.