வேலூர் மக்களுக்கு குட் நியூஸ்..! 19 கோடியில் படகு சவாரி சுற்றுலா தளம்..!
வேலூர் மாவட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வேலூர் மாவட்டத்திற்கு சுமார் 25 கோடி மதிப்பீட்டில் சிறப்புத்திட்டங்களை அறிவித்தார். இதன் மூலம் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக மாறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் செயற்கை படகு சவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பர்க்கலாம். வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சதுப்பேரி ஏரியை சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. வேலூர் சேண்பாக்கம் அருகிலுள்ள இந்த ஏரியில், ரூ.19 கோடி மதிப்பீட்டில் படகு சவாரியுடன் கூடிய இரண்டு செயற்கை தீவுகள் அமைக்கப்படும் திட்டத்தை நீர்வளத்துறை செயல்படுத்தி வருகிறது.
தற்போது வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர் கோட்டை மற்றும் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களாக இருக்கிறது. இதனை தவிர்த்து பொதுமக்கள் செல்லக்கூடிய இடங்கள் இல்லை. தற்பொழுது வேலூர் மாவட்டத்தில் புதிய சுற்றுலா தளங்கள் உருவாக வேண்டும் என்பது மக்கள் நீண்டகால கோரிக்கை மற்றும் மிகுந்த எதிர்ப்பார்க்காக உள்ளது.
மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு , சதுப்பேரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளைப் புதுப்பித்து சுற்றுலா மையங்களாக மாற்றும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. சதுப்பேரி ஏரியின் பரப்பளவு 250 ஹெக்டேராகும். தற்போது 6.5 மீட்டர் ஆழத்திற்கு மண் அகற்றப்படும் பணி நடைபெற்று வருவதோடு, மழைநீர் சேமிப்புத் திறனும் அதிகரிக்கப்படுகிறது.
ஏரியின் கரை ஓரத்தில் 1.5 கிமீ நடைபாதை அமைக்கப்படும். இருபுறத்திலும் தடுப்பு கம்பிகள், முழுவதும் மின் விளக்குகள் பொருத்தப்படும். மையத்தில் அமைக்கப்படும் செயற்கை தீவுகளில் அரிய வகை மரங்கள் நட்டுப் பாதுகாக்கப்படும். தோட்டக்கலைத் துறையின் பங்கேற்புடன் பறவைகளை ஈர்க்கும் வகையில் மரம் மற்றும் செடிகள் நடப்படும். இதன் மூலம் மக்கள் கவரும் வகையில் இருக்கும்.
ஏரியின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பை வீசப்படுவதைத் தடுக்கும் வகையில், 1,700 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட இரும்பு வேலி அமைக்கப்படும். குழந்தைகள் விளையாடும் பூங்காவும் ஏரிக்கரையில் உருவாக்கப்படும்.இத்தனை பணிகளும் 2025 இறுதிக்குள் முடிந்து, 2026 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக செயற்பொறியாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வேலூர் மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் வளர்ச்சி மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.