1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..! ஆசியாவிலேயே பெரிய முருகன் சிலை மருதமலையில் அமைகிறது..!

1

கோயம்புத்தூரிலுள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு கோவை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செல்கிறார்கள்.

கோயிலுக்கு வாகனங்கள் மூலம் செல்பவர்கள், பார்க்கிங் இடம் வரை சென்று, அங்கிருந்து படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர்... அதனால், இங்குள்ள படிக்கட்டுகளை ஏறுவதற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமாக இருப்பதை அறிந்த அறநிலையத்துறை, பக்தர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க திட்டமிட்டது. இதற்காக கோயிலின் ராஜ கோபுரம் அருகே ரூ.5.20 கோடி மதிப்பில் லிப்ட் அமைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.. அதேபோல, இதற்காக கோயில் வளாகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் கொடிமரம் மண்டபம் கட்டுமான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு குட்நியூஸ் அறிவித்துள்ளார் தமிழக அமைச்சர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.. முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சருடனான ஆய்வில் பங்கேற்றனர்.

மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், மாஸ்டர் திட்டத்தில், பார்க்கிங் அமைப்பதற்கான இடங்கள், லிப்ட் அமைக்கும் பணி, திருமண மண்டபம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு, சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. பழனியில் அன்னை தமிழிலும் குடமுழுக்கு நடந்துள்ளது.. 60 வயது முதல் 70 வயதிலான மூத்த குடிமக்களை, அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில், ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவின் மூலம் இதுவரை, 1,622 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஏழு முருகன் கோவில்கள் பெருந்திட்ட வரைவிற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 400 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, பழனி தண்டாயுதபாணி கோயிலில், முதல் பெருந்திட்ட வரையில், 99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், இரண்டாம் பெருந்திட்ட வரைவில், 50 கோடி ரூபாய் மதிப்பில் நில ஆர்ஜிதம் செய்யும் பணியும், திருத்தணியில், 183 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, திருச்சி, வயலூர் முருகன் கோவிலில், அடுத்த மாதம் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், அங்கேயும்30 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. நீலகிரி மாவட்டம் ஊட்டி, காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 16 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த 7 முருகன் கோவில்களில் மட்டும், 872 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை பொறுத்தவரை, முதற்கட்டமாக, ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுடன், ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.. 2ம்கட்டமாக, 11 கோடியில் திட்டப்பணிகளும், 3ம் கட்டமாக, 23 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சிறுவாபுரி திருக்கோவிலில், 16 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.. மருதமலையில் அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள், ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் முடிவடையும்.. அப்பணிகள் முடிந்ததுமே, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அதேபோல, மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயரத்தில், கல்லினாலான முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டது. சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு உறுதி செய்யப்பட்டதுமே, ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.. வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, தேவையான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.. இந்த வருடம் முதல் மலையேறும் பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.. விரைவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்" என்றார் அமைச்சர் சேகர்பாபு.

Trending News

Latest News

You May Like