1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு குட் நியூஸ்..! பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்..!

1

கடந்த 1-ம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ. 35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ. 40.61 செலவில் ஒரு கிலோ சர்க்கரையும், ரூ. 33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய, ரூ. 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த அரசாணையில் ரொக்கத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தீவிர ஆலோசனைக்குப் பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். இந்த நன்னாளை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி - சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்  பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கி வரும் 9-ம் தேதி வழங்கப்படுகிறது.  

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ரேசன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அதே போல், 13-ம் தேதிக்குள் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள், 14-ம் தேதியும் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 -ம் தேதி வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை, இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக, அதாவது வரும் 10- ம் தேதியே உரிமைத் தொகை பெற்று வரும் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like