மக்களுக்கு குட் நியூஸ்..! இனி மாத துவக்கத்திலேயே ரூ.1,000 உரிமைத்தொகை தொகை..!

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்திலேயே அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1,000 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கினால் அந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க உபயோகமாக இருக்கும் என்பதால் மாத துவக்கத்திலேயே வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.