1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! பால் விலை லிட்டருக்கு 4 ருபாய் குறைந்தது..!

1

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் கடந்த மார்ச் 14ம் தேதி ஆரோக்யா பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00 ரூபாயும் தன்னிச்சையாக உயர்த்திய நிலையில் அந்நிறுவனத்தை பின்பற்றி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விற்பனை விலை உயர்வை உடனடியாக அமுல்படுத்தின. இருப்பினும் அந்நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00 ரூபாய் மட்டுமே உயர்த்தின.

ஏற்கனவே கடந்தாண்டு (2024) டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும், நடப்பாண்டின் (2025) பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்திய அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அடுத்த ஒரு மாத இடைவெளியில் (மார்ச் மாதம் 14ம் தேதி முதல்) மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தியதால் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி சில்லறை வணிகர்கள், தேனீர் கடை, உணவகங்கள், இனிப்பகங்களின் உரிமையாளர்கள், கேன்டீன் நடத்துவோர் என பலதரப்பட்டோர் மத்தியிலும் வெறுப்பை சந்திக்க நேரிட்டது.

இதன் காரணமாக விற்பனை விலையை உயர்த்திய முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனை சரிவடையத் தொடங்கிய நிலையில் வரலாறு காணாத வகையில் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனத்தின் பால் விற்பனையும் கடும் சரிவை சந்திக்கத் தொடங்கியது.

இதனால் விழித்துக் கொண்ட ஹட்சன் நிறுவனம் பால் முகவர்களுக்கும், சில்லறை வணிகர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கியும் பால் விற்பனை உயராத காரணத்தால் தங்களது நிறுவனத்தின் பால் விற்பனையை தக்க வைத்துக் கொள்ளவும், குறைந்த பால் விற்பனை அளவை உயர்த்திடும் நோக்கத்திலும் அதிகளவில் விற்பனையாகும் வணிக பயன்பாட்டிற்கான நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 4.00ரூபாய் குறைக்க முடிவு செய்து முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி லிட்டருக்கு 2.00ரூபாயும், நேற்று (24.04.2025) முதல் லிட்டருக்கு 2.00ரூபாயும் என லிட்டருக்கு 4.00ரூபாய் விற்பனை விலை குறைப்பை அந்நிறுவனம் தற்போது அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஆரோக்யா 500மிலி நிறைகொழுப்பு பால் பாக்கெட் 40.00ரூபாயில் இருந்து 38.00ரூபாயாகவும், 1லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட் 75.00ரூபாயில் இருந்து 71.00ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk) மற்றும் தயிர் விற்பனை விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலின் விலையை எவ்வளவு உயர்த்தினாலும் பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே வாங்கிக் கொண்டிருப்பார்கள் என எண்ணியிருந்த தனியார் பால் நிறுவனங்களுக்கு தற்போது பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் பதிலடி கொடுக்க தொடங்கியிருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.

ஏனெனில் பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத காலகட்டத்தில் கூட பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி தொடர்ந்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்குமான பால் வணிகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெருத்த அடி என்பது இனிமேலாவது மக்களின் வாங்கும் திறனறிந்து தனியார் பால் நிறுவனங்கள் செயல்படுவதற்கான படிப்பினையாகும் என்றால் அது மிகையாகாது.

மேலும் கடந்த மார்ச் மாதத்தில் பால் (நிறைகொழுப்பு மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால்), தயிர் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனம் தற்போது பால் விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது, குறிப்பாக நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது ஏற்புடையதல்ல.

எனவே நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் தயிர் விற்பனை விலையையும் குறைக்க ஹட்சன் நிறுவனம் முன் வர வேண்டும், அதுமட்டுமின்றி புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல ஹட்சன் நிறுவனத்தை பின்பற்றி கடந்த மார்ச் மாதம் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அதன் விற்பனை விலையை உடனடியாக குறைக்க முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு பால், தயிர் விற்பனை விலையை குறைக்க முன் வராத தனியார் பால் நிறுவனங்களுக்கு பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அனைத்து தனியார் பால் நிறுவனங்களுளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like