பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! தமிழகப் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்பு..!

கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அப்படியான சூழலை பார்க்க முடிந்தது. நடப்பாண்டை பொறுத்தவரை ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் புதிய கல்வியாண்டிற்கு தயாராகும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல், பாடப் புத்தகங்கள் அச்சிடுதல், பள்ளிகளை தயார்படுத்துதல், பாடத்திட்டம் தயாரித்தல், பாடவேளை அட்டவணை உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சற்றுமுன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் வெப்பநிலை 104 டிகிரி அளவிற்கு வந்துவிட்டது. தற்போதைக்கு ஜூன் மாதம் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் வெப்பத்தின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி பற்றி முடிவு செய்யப்படும். இதுதொடர்பான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகம் என்ன சொல்கிறதோ? அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கக் கூடாது என்று சட்டமன்றத்தில் பேசும் போது கூறியிருக்கிறேன். 2009ஆம் ஆண்டிலேயே கட்டணத்தை நிர்ணயம் செய்கிற ஆணையத்தை அமைத்துள்ளோம். இதற்கு முன்னாள் நீதியரசர் தலைமை வகித்தார். அந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை ஏற்க முடியாது. ஒருவேளை விதிமீறலில் ஏதேனும் பள்ளிகள் ஈடுபட்டால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.