ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..! இன்று ரேஷன் குறைதீர் முகாம்..!

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் 10.05.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 10.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொது விநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளிக்கலாம்.
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 10.05.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் -2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேனி: மாவட்டத்தில் மே 10 ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் முகாம் 5 தாலுகாவிலும் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள், நுகர்வோர் குழுக்கள் பங்கேற்று ரேஷன் வினியோகம் தொடர்பான குறைகள் புகார்களை தெரிவிக்கலாம். மனுக்களை பெற்றுக்கொள்ள துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். பெரியகுளம் தெய்வேந்திரபுரம் ரேஷன்கடை, தேனி வெங்கடாசலபுரம் ரேஷன்கடை, ஆண்டிபட்டி ஜி.உசிலம்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் கீழபூலானந்தபுரம், போடி வாழையாத்துப்பட்டி ரேஷன் கடை ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.