விவசாயிகளுக்கு நற்செய்தி.. சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை..!
விவசாயிகளுக்கு நற்செய்தி.. சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை..!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021 - 2022-ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது, “கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும், கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்த ஊக்கத்தொகை மூலம் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள். சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத்தெரிவித்தார்.
இந்த நிலையில், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 150 ரூபாய் என்று கணக்கிட்டு வழங்க, 138.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.