பக்தர்களுக்கு நற்செய்தி.. திருச்செந்தூர் கோவிலில் இன்று முதல் கட்டணங்கள் ரத்து..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய 250 ரூபாய், 100 ரூபாய், 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முதல் ரூ.250 மற்றும் ரூ.20 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை கூறுகையில், “திருச்செந்தூர் திருக்கோவிலில் ஐகோர்ட் உத்தரவுபடி, இந்து சமய ஆணையர் சில நிபந்தனைகளை உத்தரவாக பிறப்பித்தார்.
அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 மற்றும் ரூ.20 ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.
இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று (8-ம் தேதி)முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கோவிலில் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் இருக்கும்.
அதே போல், 125 ஆயுதப்படை காவலர்கள் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில், முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர்.
ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும் பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. விஐபி தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது.
கோவிலில் கைங்கர்யம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோவிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் இருக்கும்” என்று தெரிவித்தார்.