கோவை வியாபாரிகளுக்கு நற்செய்தி..! நள்ளிரவு வரை கடைகள் திறந்திருக்கலாம்..!
கோவையில் தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.துணிக்கடைகள், நகைக்கடை உள்ளிட்ட கடைகளில் அதிக அளவு மக்கள் கூட்டம் மாலை வேளைகளில் காணப்படுகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் குடும்பமாக வந்து பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்கி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விதவிதமான பல்வேறு டிசைன்களில் ஆடைகள் வந்துள்ளதால் பல துணிக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக கோவையில் உள்ள முக்கிய கடைவீதிகளான ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் நிலையில், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு வியாபார நிறுவனங்களின் நேரத்தை அதிகரிப்பது குறித்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வியாபார நிறுவனங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு ஒரு மணி வரை செயல்பட அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் இந்த கூடுதல் நேரத்தை பயன்படுத்தி, இரவு நேரத்தில் வியாபார நிறுவனங்களுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். இரவு நேரத்தில் வரும் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
#NewsUpdate | தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி#SunNews | #Deepavali2024 | #KovaiPolice pic.twitter.com/WqwrnKjJaL
— Sun News (@sunnewstamil) October 23, 2024
.png)