1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் பெண்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!

1

ஜூலை 15 முதல் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் திட்டத்தில் சேர தவறிய தகுதியான பெண்கள் மீண்டும் வாய்ப்பு பெறுவர்.

முதல்வர் ஸ்டாலின் சமீபத்திய சுற்றுப்பயணங்களிலும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜூலை 15 முதல் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1000 தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாணை படி, நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களின் பெண்களும், பிற ஓய்வூதியம் பெறுபவர்களும் இனி விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் கூடுதல் பெண்கள் இந்த திட்டத்தின் பயனை பெற வாய்ப்பு கிடைக்கும்.

இந்த அறிவிப்புகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முன்னேற்றும் முக்கியமான பருவமாக பார்க்கப்படுகிறது. அரசு வழங்கிய புதிய தளர்வுகள் மற்றும் முகாம்கள் மூலம் பல பெண்கள் தங்களுக்கான நிதி உதவியை பெறவுள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அதில் முக்கிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?

தளர்வுகள் என்னென்ன?

நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களின் பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதுவரை நான்கு சக்கர வாகனம் இருந்தால் தகுதி மறுக்கப்பட்டது. இப்போது இந்தத் தடையை அகற்றி, அவர்களுக்கும் ரூ.1000 தொகை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிற ஓய்வூதியம் பெறுபவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு ஓய்வூதியாளர்களைத் தவிர, தனியார் அல்லது பிற அமைப்புகளின் ஓய்வூதியம் பெறுபவர்கள் முன்பு தகுதியில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதிகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

* அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

* இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவ்வாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like