குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைக்கு எடுக்க திட்டம்..!

விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மண்டலங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு மண்டலங்களுக்கும் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த சேவை வழங்குநர்களுக்கு தனித்தனியே டெண்டர் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரத்தை எடுத்துக் கொண்டால் 667 ஓட்டுநர்களும், 724 நடத்துநர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த மண்டலத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலத்தை எடுத்துக் கொண்டால் 142 ஓட்டுநர்களும், 134 நடத்துநர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான பணிகள் முடிந்ததும் ஒப்பந்த ஊழியர்கள் வேலைக்கு வந்துவிடுவர். அதன்பிறகு பேருந்துகளை இயக்குவதில் சிரமங்கள் இருக்காது என்று தெரிகிறது. புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துவதற்காக சேவை வழங்குநர்களுக்கு சில வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஓட்டுநர்கள் 24 முதல் 48 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். குறைந்தது 18 மாதங்கள் ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.
நடத்துநர்களை பொறுத்தவரை 24 முதல் 48 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நடத்துநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். மேலும் முதலுதவி சான்றிதழ், பொது சேவை பேட்ஜ் ஆகியவையும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.