குட் நியூஸ்..! தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்து கூறியதாவது,
மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை, விழுப்புரம், வேலூர் , தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.