குட் நியூஸ்..! அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!

அரசின் கொள்கை முடிவின்படி, ஆண்டு முழுவதும் அங்கன்வாடி குழந்தைகள் மையங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின்னர், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், 'மே 8-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்தும், 2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட முன்பருவக் கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவை 15 நாட்களுக்கு சேர்த்து 750 கிராம் கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பு வழங்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு வருகிற 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், இயக்குனர் மற்றும் குழும இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தனர். அதனை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, 2018-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்தும், கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் நடப்பாண்டில் வருகிற 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாட்களில் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் 750 கிராம் சத்துமாவினை கோடை விடுமுறைக்கு முன்னர் வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் பயனாளிகளுக்கு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.