குட் நியூஸ்..! எலக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 10,000 ரூபாய் உதவித்தொகை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8320e1c1c42386df1df2645edb0a5aa4.png?width=836&height=470&resizemode=4)
எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரூ. 500 கோடி மதிப்பிலான மின்சாரப் போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 (EMPS-2024) என்ற ஒன்றை அமல்படுத்த உள்ளது. வாகனத்தின் விலை குறைந்தால் விற்பனை அதிகரிக்கும் என்ற நோக்கில் இத்திட்டம் அமல்படுத்த உள்ளது.இதன் மூலம் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் திட்டத்தை (இஎம்பிஎஸ்) செயல்படுத்த மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.இத்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டம் 2024 இது ஜூலை மாதம் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
மின்சாரப் போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 (EMPS-2024) என்ற திட்டத்தை அறிவித்துள்ள கனரக தொழில் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, இந்தியாவில் மின்னணு போக்குவரத்தை மேம்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு உதவி வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் சிறிய மூன்று சக்கர வாகனங்கள் (இ-ரிக்ஷா) வாங்குவதற்கு ரூ.25,000 வரை அரசின் உதவி வழங்கப்படும். அதேபோல, பெரிய மூன்று சக்கர வாகனம் வாங்கும் போது 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். FAME-2 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் 2024 மார்ச் 31 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.