குட் நியூஸ்..! விரைவில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்..!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 14 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை மிகச்சிறப்பாகக் கையாண்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். கோடை காலத்தில், குடிநீர் பிரச்சினை மற்றும் மின்வெட்டு ஆகியவை ஏற்படாமல் கவனமாக கையாண்டதற்காக நன்றியும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அடுத்தடுத்து இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப் பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ என்கிற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம் தான் தமிழகத்தின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள்.
இதுபோன்ற திட்டங்களில் ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மிக முக்கியமானவை. புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க,சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, சிறந்த சமூகநல திட்டங்களைச் செயல்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்; பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம் என்ற முதல்வர், அத்தகைய நல்லாட்சியைதான் நாம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தை வரும் ஜூலை 15ம் தேதி முதல் செப்டம்பர் திங்கள் 15ம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிவித்த அவர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும் நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.