1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வீடு தேடி வரப்போகும் ரேஷன் பொருட்கள்..!

1

தமிழ்நாட்டில் முதன்முறையாக இல்லம் தேடி ரேஷன் என்ற திட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் வெள்ளக்கவி கிராமத்தில் தொடங்கப்பட்டது. சாலை வசதி இல்லாத அந்த கிராமத்துக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கொடைக்கானல் வட்டத்தில் உள்ள சின்னுார், பெரியூர் மலைக்கிராமங்களுக்கும் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதி என்பதால் இங்குள்ள மலைப்பகுளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 


அந்த வகையிலே மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பான செயல்பாடுகளின் காரணமாக, கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி மலை கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கும் வகையில் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன.


கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சி மலைக்கிராமம் என்பதால் சாலை வசதி இல்லாத காரணத்தினால் அங்கு வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்கு உரிய குடிமைப் பொருட்களை வட்டக்கானல் பகுதியில் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சுமார் 7 கி.மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக தலைச்சுமையாகவும் மற்றும் குதிரைகளில் பொதி சுமை மூலம் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

வெள்ளகவி மக்கள், தங்கள் கிராமத்திற்கு குடிமைப்பொருட்களை கொண்டு வந்து வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையினை பூர்த்தி செய்யும் வகையில், அமைச்சர் பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் ஆலோசனையின்பேரில், இல்லம் தேடி ரேஷன் என்ற வகையில், வெள்ளகவி மலை கிராம மக்களுக்கான குடிமைப்பொருட்களை சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக அவர்கள் கிராமத்திற்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி, கொடைக்கானல் டவுன்-1 நியாய விலைக்கடையில் மலைகிராமமான வெள்ளகவி பகுதிக்குட்பட்ட 120 குடும்ப அட்டைகளில் 30 குடும்ப அட்டைதாரர்கள் வெளியூர்களில் தங்கி வேலைபார்ப்பதால் ஒரே நாடு ஒரே கார்டு (One Nation One Card) திட்டத்தின் கீழ் குடிமைப்பொருள் பெற்று வருகின்றனர். மீதமுள்ள 90 குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியிலிருந்து குதிரைகள் மூலம் வெள்ளகவி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 17.04.2025 அன்று விநியோகம் செய்யப்பட்டன.

இதேபோல், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் மற்றும் சின்னுார் ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள 110 குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடிமைப்பொருட்களை அந்தந்த கிராமங்களுக்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிமைப் பொருட்களை பெற்றுச் செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் சாலை வசதி இல்லாத காரணத்தினால் உப்புக்காடு என்னுமிடத்திலிருந்து மலை உச்சி பகுதிகளான பெரியூர் பகுதிக்கு 7 கி.மீட்டர் தூரமும், கல்லாறு என்னுமிடத்திலிருந்து சின்னூர் பகுதிக்கு 6 கி.மீட்டர் தூரமும் தலைச்சுமையாகவும், குதிரைகளில் பொதி சுமை மூலம் கொண்டு சென்றனர்.

இந்தப்பகுதி பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான குடிமைப்பொருட்கள் உப்புக்காடு மற்றும் கல்லாறு ஆகிய இடங்கள் வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குதிரைகளில் பெரியூர் மற்றும் சின்னுார் கிராமங்களுக்கு அரசு சார்பில் கொண்டு செல்லப்பட்டன. இன்னும் 2 நாட்களில் அந்த மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like