குட் நியூஸ்..! முன்னேரே வருகிறது பொங்கல் பரிசு தொகுப்பு..!
பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் வேட்டி சேலை குறித்த அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்த பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 இடம் பெறவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களை வீடு வீடாக சென்று விநியோகப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது