குட் நியூஸ்..! சென்னையில் ‘பிங்க்’ ஆட்டோ திட்டம்!

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘பிங்க்’ ஆட்டோக்களைத் தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயணிக்க, பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் பிங்க் ஆட்டோக்கள் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட உள்ளன.
பெண்கள் சுய தொழிலில் முன்னேறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
இதற்காக, பெண்களுக்கான ஆட்டோக்கள் முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான மாற்றம் மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
விதிகள்:அதன்படி, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விதிகளின்படி, பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். பிங்க் ஆட்டோ திட்டத்தில் ஆட்டோவுக்கு பெண்களே உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் இருத்தல் வேண்டும்.பிங்க் ஆட்டோ ஓட்டும் பெண்கள் பிங்க் நிற சீருடையில் இருக்க வேண்டும். பிங்க் ஆட்டோக்கள் அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றப்படாது. ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் விஎல்டிடி என்று அழைக்கப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.