குட் நியூஸ்..! இனி வெறும் 100 ரூபாயில் ஊட்டி முழுவதையும் சுற்றிப் பார்க்கலாம்..!

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்கள் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஊட்டி, கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் மலர்க் கண்காட்சி, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் என களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 'சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை' இயக்கி வருகின்றது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் "ஊட்டிக்குச் சுற்றுலா வரும் பயணிகள் 'பாதுகாப்புடன் அதே சமயம், குறைந்தச் செலவில் ஊட்டியைச் சுற்றிப் பார்க்க வேண்டும்' என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நீலகிரி மண்டலம், இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, இந்தச் சுற்றுப் பேருந்துகள் மத்தியப் பேருந்து நிலையத்தில் தொடங்கி தண்டர்வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம், ரோஜா பூங்கா போன்ற இடங்களைக் சுற்றிப் பார்க்கலாம்.
எந்த நாளில் பயண அட்டை எடுக்குறீர்களோ, அந்த தேதியில் பயண அட்டையில், 'டிக்' அடித்துத் தருவார்கள். நீங்கள் அந்த டிக்கெட்டை வைத்து, அந்த நாள் முழுவதும் ஊட்டியின் முக்கியச் சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்கலாம். அதன்படி தண்டர் வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம், ரோஜா பூங்கா இவைகளில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம். அதிலும் சிறுவர்களாக இருந்தால் கட்டணம் வெறும் ரூ50 தான். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.
பயணிகள் தங்கள் விருப்பப்படி, ஒரு இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம். அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால், முதல் சுற்றுப்பேருந்தில் எடுத்த பயண அட்டையைக் காட்டி, மற்ற சுற்றுப் பேருந்துகளில் காட்டி பயணம் செய்யலாம். இந்த பயண அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். ஒரே நாளில் சுற்றிப் பார்க்க வேண்டும் என நினைக்கும் சுற்றுலாப் பயணிகள், அதற்கு ஏற்ப தங்களது திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் ஜூன் 10ம் தேதி வரை நீடிக்கும்." எனத் தெரிவித்துள்ளது.