குட் நியூஸ்..! இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் 'வாட்ஸ்அப்'பில் கருத்துகளை தெரிவிக்கலாம்..!

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்குமிடம், உணவு, குடிநீர், பிரசாதம் உட்பட பல்வேறு சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் சேவையை மேம்படுத்த பக்தர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கும் வகையில், வாட்ஸாப் வாயிலாக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸாப் எண் அடங்கிய கியூ.ஆர்., குறியீடை திருப்பதி மற்றும் திருமலையில் அனைத்து இடங்களிலும் ஒட்ட உள்ளனர்.
இந்த கியூ.ஆர்., குறியீடு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்திலும் ஸ்கேன் செய்யும் வசதியுடன் உள்ளது. வாட்ஸாப்பை திறந்து அதன் மேல்பகுதியில் இருக்கும் ஸ்கேனர் பட்டனை அழுத்தினால், இந்த கியூ.ஆர்., குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தான கருத்து வழங்கும் எண்ணுக்கு அழைத்துச் செல்லும்.
அந்த எண்ணுக்கு செய்தி அனுப்பி, கோவிலில் வழங்கப்படும் சேவைகளான அன்ன பிரசாதம், கோவிலின் துாய்மை, லட்டு பிரசாதத்தின் தரம், உடைமைகள் வைக்கும் அறை, லஞ்சம் மற்றும் ஒட்டுமொத்த அனுபவம் குறித்து பக்தர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அவற்றை தேவஸ்தான நிர்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என, கூறப்பட்டுள்ளது.