1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!

Q

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான் என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இதனிடையே தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16 சதவிகிதம் உயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனை பரிசீலித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்றே கூறப்பட்டது.

ஆனால், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வகையில் உள்ளதாகவும், இப்போது மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என்று விளக்கினார்.

அதே சமயம் ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணம் தொடர்பான ஆணையை அமல்படுத்தும்போது, அதனை வழங்கிடும்போது, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என்றும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மின் கட்டண உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like